புத்தகத்தை பார்த்து எழுதலாம்ஆன்லைன் செமஸ்டர் தேர்வில் புதிய மாற்றங்கள்அண்ணா பல்கலைக்கழகம் தகவல்
ஆன்லைன் செமஸ்டர் தேர்வில் புதிய மாற்றங்கள் கொண்டு வரப்பட இருப்பதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகம் கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் செமஸ்டர் தேர்வை நடத்தியது. இந்த தேர்வை சுமார் 4 லட்சம் மாணவர்கள் எழுதினார்கள்.
கொரோனா காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டு இருக்கும் நிலையில், செமஸ்டர் தேர்வு ஆன்லைனில் நடத்தப்பட்டது.
அதற்காக அண்ணா பல்கலைக்கழகம் பிரத்தியேகமாக மென்பொருளை உருவாக்கி இருந்தது. அந்த மென்பொருளை பயன்படுத்திதான் 3 செமஸ்டர் தேர்வுகளை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி முடித்தது.
அந்தவகையில் சமீபத்தில் நடந்த செமஸ்டர் தேர்வு முடிவுகள் கடந்த வாரம் வெளியிடப்பட்டது. அதில் சுமார் 30 முதல் 40 சதவீதம் மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றதாக தகவல் வெளியானது. இது தேர்வை எதிர்கொண்ட மாணவர்களுக்கு அதிர்ச்சியை தந்தது.
பிரத்யேக மென்பொருள் மூலம், பல்வேறு ஆப்ஷன்களுடன் கூடிய கேள்விகளைக் கேட்டு அதற்கு பதில் அளிக்குமாறு தேர்வை நடத்திய போது மாணவர்கள், வாட்ஸ் அப் மூலம் பதிலைக் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டதால் அது முறைகேடாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டது என்றும், இதன் காரணமாக அம்மாணவர்கள் தேர்வில் தோல்வி அடைந்ததாகவும் பல்கலைக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் அடுத்த மாதத்தில் (மே) நடைபெற உள்ள செமஸ்டர் தேர்வில் புதிய மாற்றங்கள் கொண்டுவரப்பட இருப்பதாகவும், அதன்படி நேரடி விடைகளைக் கொண்ட கேள்வியாக இல்லாமல், பாடங்களைப் புரிந்து பதில் அளிக்கும் வகையில் விளக்க வகை சார்ந்த கேள்விகள் கேட்கப்படும் என்றும், இதற்காக மாணவர்கள் தேர்வின் போதே புத்தகத்திலும், இணையத்திலும் எடுத்துக்காட்டுகளை தேடி, அதன்படி விடையளிக்க வாய்ப்பு வழங்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த புதிய விளக்க வகை தேர்வானது, இறுதி செமஸ்டர் மாணவர்கள் தவிர பிற ஆண்டு மாணவர்களுக்கு நடத்தப்படும் என்றும், அதே வேளையில் இறுதி செமஸ்டர் மாணவர்களுக்கு வழக்கம் போல், பல்வேறு ஆப்ஷன்களைக் கொண்ட நேரடி கேள்விகளே கேட்கப்படும் என்றும், அவர்களுக்கு இந்த புதிய மாற்றம் பொருந்தாது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.